ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?
- Get link
- X
- Other Apps
சுத்தியும் மலை.... நடுவுல சின்ன குடிச வீடு அங்க நீயும் நானும் மட்டும். மழை எப்பவும் தூரிக்கிட்டே இருக்கணும் பக்கத்துல ஒரு பொட்டிக்கட கூட இருக்கக்கூடாது. ஆறு ஏழு கிலோமீட்டர் நடந்து தான் பால் வாங்க கூட போகணும். பக்கத்துல எந்த வீடும் இல்ல நம்ம வீடு மட்டும் தான் இப்படி இருந்தா எப்டி இருக்கும் என்று கண்ணைச் சிமிட்டி அவள் கேட்கும் போதே முகத்தில் நாலு அறை விடலாம் அளவுக்கு கோபம் வரும்.
என்ன செய்ய காதலித்து தொலைக்கிறேனே.... சூப்பர் பேபி எப்டி உனக்கு இப்டி எல்லாம் தோணுது என்று கொஞ்ச வேண்டிய நிலைமை. இந்த காதலிகள் எப்போ குழந்தையாய் மாறுவார்கள், எப்போ மனைவி ரோலை எடுப்பார்கள், எப்போது பத்திரகாளி அவதாரம் எடுக்கிறார்கள் என்று நம்மால் யூகிக்ககூட முடியாது. நொடிப்பொழுதில் அந்த மாற்றங்கள் நிகழும்.

பேருந்து நிலையம் :
நான் பி.இ படித்து எம்.பி.ஏ படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று எவனோ ஒருவன் என் அப்பா காதில் ஓத அதையும் படித்து முடித்து இரண்டு வருடங்கள் வேலையில்லாமல் சுற்றி கடைசியாக நண்பன் ஒருவன் மூலமாக ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்கிடைத்து செல்ல ஆரம்பித்திருந்தேன்.
வேலை கிடைத்த முதல் ஆறு மாதங்கள் பேருந்தில் தான் செல்வேன் அப்போது தான் அவளைப் பார்த்தேன். காலையில் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் ஏழு மணிக்கு நான் செல்லும் நேரத்தில் அவள் நிற்பாள். பார்த்ததும் காதல் எல்லாம் இல்லை. அவளது நீளமான கூந்தல் மிகவும் பிடித்திருந்தது.
அவளும் கவனிக்கிறாள் :
ஒரு கட்டத்தில் தினமும் என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள். உங்க பஸ் இன்னக்கி சீக்கிரம் போய்டுச்சு.., என்ன இன்னக்கி சீக்கிரம் வந்துட்டீங்க என்று பேசினாள். நானும் பதிலுக்கு பேசுவேன். எண்களை பரிமாறிக் கொண்டோம்.
எப்போதும் காலையில் மட்டும் தான் சந்திப்போம். மாலையில் எந்த நேரத்தில் வருகிறாள், எந்த பஸ்ஸில் வருவாள் எதுவும் தெரியாது.
என்ன படிக்கிற? :
எண்ணை பரிமாறிக் கொண்ட மறுநாளே நாம் பேசினாள் நம்மைப் பற்றி எதாவது தவறாக நினைத்துக் கொள்வாளோ என்று நினைத்து நான் பேசாமல் இருந்தேன். மறுநாள் பேருந்து நிலையத்திற்கு வந்தவள், உரிமையுடன் பேச ஆரம்பித்தாள்.
என்ன போன் நம்பர் கொடுத்தேன்ல ஏன் கூப்டல.... நேத்து சாய்ந்தரம் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணேன் தெரியுமா? என்று சொன்னாள்.
அச்சோ... சாரி கொஞ்சம் வொர்க் டென்சன் அதவிட ஆபிஸ் விட்டு லேட்டா தான் வந்தேன் என்று சமாளித்தேன். பொய் சொல்ல ஆரம்பித்தேன்.... சமாளிக்கப்பழகினேன்.

காதல் வாழ்கவே :
அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். எனக்கு நிறையத் தயக்கங்கள் இருந்தது. அவளிடம் பேசலாமா வேண்டாமா? நண்பர்களிடம் எல்லாம் எங்களின் அறிமுகத்தைப் பற்றியும் எண் கையில் இருக்கிறது பேசத் தயக்கமாக இருக்கிறது என்றும் சொல்ல.. பிடித்துக் கொண்டார்கள்.
அவளுக்கே இண்ட்ரஸ்ட் இருக்குறப்போ நீ ஏண்டா சும்மா விடற? பேசு மச்சி என்று சொன்னார்கள்.
இன்னும் சிலர் அதற்கு அடுத்துக்கட்டம் போய் அவளுடன் என்னையும் சேர்த்து ஓட்ட ஆரம்பித்தனர்.
முதல் அதிர்ச்சி :
சில வாரத் தயக்கங்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தோம். டெய்லி சாய்ந்தரம் எப்போ ஆபிஸ் முடியும்? உன்னைய இதுவரைக்கும் சாய்ந்தரம் பாத்ததே இல்லையே.... என்று கேட்க அவள் சிரித்துக் கொண்டே ஐயயோ ஆபிஸ் எல்லாம் இல்ல நான் இப்ப தான் 11த் படிக்கிறேன்.************ ஸ்கூல் மார்னிங் மேக்ஸ் கிளாஸ் போறேன் அப்போதான் நீங்க பாப்பீங்க. 8-9 கிளாஸ் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டு 9.30க்கு ஸ்கூல் போவேன் என்றாள்.
எனக்கு ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது, என்னது ஸ்கூலா? அவ்ளோ சின்ன குழந்தையா? எனக்கு அவளுக்கும் கிட்டத்தட்ட 11 வயது வித்யாசம் இருக்கிறதே.
பள்ளிச் சீருடை :
நான் நம்பாமல் திரும்ப திரும்ப கேட்க இருங்க நாளைக்கு நான் ஸ்கூல் யூனிஃபார்ம்ல வரேன் என்று சொல்லி, மறுநாள் பள்ளிச்சீருடையில் வந்தால். அடிப்பாதகத்தி இவ்ளோ நாள்ல ஒரு வார்த்தை சொல்லிருந்தா என் மனசுல ஆசைய வளர்த்திருக்க மாட்டேனே என்று நொந்து கொண்டேன்.
எல்லாமே நொறுங்கிப் போனது. அதை விட இவளைப் பற்றிச் சொன்ன நண்பர்களிடத்தில் என்ன சொல்வது ? அவர்கள் என்னை கிண்டலடிப்பார்களே என்ற எண்ணம் கலக்கத்தை ஏற்படுத்தியது.
தயக்கத்துடன்... :
அதன் பிறகு அவளுடன் சகஜமாக பேச முடியவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக விலக நினைத்தேன். இல்லை பள்ளி செல்லும் சிறுமியை எல்லாம் காதலிப்பது தவறு இன்னும் இரண்டு வருடங்களில் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுப்பர் அப்போது தான் அவள் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருப்பாள்.
அதை விட பத்து வயது வித்யாசத்தில் யாருமே திருமணம் செய்து கொடுக்க இப்போதெல்லாம் ஒப்புக் கொள்வதில்லை.
இப்போதாவது தெரிந்ததே என்று நினைத்துக் கொண்டு விலகிட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டேன்.
நேரம் மாற்றம் :
வேண்டுமென்றே காலையில் அரை மணி நேரம் தாமதமாக செல்ல ஆரம்பித்தேன். அவளுடைய போனுக்கும் மெசேஜுக்கும் தாமதமாக பதில் சொன்னேன். பல நேரங்களில் அவளது போனை எடுக்காமல் தவிர்த்தேன்.
அந்த விலகல் புதிய தலைவலியை உண்டாக்கியது. அதை விட அவளது குறுஞ்செய்திகள் ஒவ்வொன்றையும் படிக்கும் போதும் ஏதோ நான் தவறு செய்கிறேன் என்ற குற்ற உணர்வு எனக்கு மேலோங்கியது.
ஏன் அவாய்ட் பண்ற? :
ஒரு நாள் இரவு பன்னிரெண்டு மணிக்கு திடிரென்று போன் செய்தாள். நான் முதலில் கட் செய்து விட தொடர்ந்து போன் செய்தாள். இந்நேரத்தில் போன் செய்கிறாளே என்று மொட்டை மாடிக்குப் போய் பேசினேன்.
ஆன் செய்ததும் ஒரே அழுகை.... உடைந்து விட்டேன்.
என்னால் அந்த நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளுக்கு எதாவது பிரச்சனையோ என்று பயந்து விட்டு என்னாச்சு.... ஏன் அழற என்று கேட்டேன்.
அவள் அழுது கொண்டே ஏன் என்னைய அவாய்ட் பண்ற? என்னைய உனக்கு புடிக்கலையா இவ்ளோ நாள் நல்லாதான பேசினா திடீர்னு இப்டி விலகிப் போற என்று கேட்டாள்.
வொர்க் டென்சன் :
தர்ம்சங்கடமான நிலைமை. அவளிடம் எப்படிச் சொல்லி புரியவைப்பது என்று தெரியவில்லை.
உன்னை அவாய்ட் எல்லாம் பண்ணல இங்க ஷிஃப்ட் மாத்திட்டாங்க அதவிட கொஞ்சம் வொர்க் அதிகம் அதான் சரியா.... மத்தப்படி வேற எதுவும் இல்ல என்று சொன்னேன்.
நிஜமாவா?
சத்தியமா டீ... லூசு மாதிரி இப்டி நடு ராத்திரி எந்திருச்சு அழுதுட்டு இருப்பாங்களா? ஒழுங்கா போய் தூங்கு என்று அதட்டினேன்.
கெஞ்சலில் அடங்காதவள் என் கோபத்தில் அடங்கிவிட்டாள்.
லவ் பண்றேன் :
இதே போன்றதொரு சிக்கல் தான் எனக்கும் சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்டு இன்று வரை குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன், நாளை அவளைப் பார்த்து உன் மீது காதல் எல்லாம் இல்லை என்று சொல்ல வேண்டும். அவள் அதை புரிந்து கொள்வாளா என்றெல்லாம் தெரியாது.
அதற்காக அலுவலகத்தில் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.... வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்று எதாவது ஒரு சாக்கு சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
மாலையில் :
அன்றைக்கு மாலை காபி ஷாப்பில் சந்தித்தோம்.
ஏன் முன்ன மாதிரி என்கிட்ட பேச மாட்ற?
வொர்க் டென்ஷன்னு சொன்னேன்ல....
என்ன ஒரு ரிப்ளை பண்ண முடியாத அளவுக்கா வொர்க் என்று ஆரம்பித்தாள்.....அவளை திசை மாற்ற வீட்டுல எனக்கு பொண்ணு பாக்குறாங்க என்றேன்.
கப்சிப்.
நானே தொடர்ந்தேன். அடுத்த வருஷம் கல்யாணம் முடிச்சிருவாங்க அப்பறம் சின்னவன் ஒரு தம்பி இருக்கான். அவன் வேலைக்காக ஃபாரின் போற ப்ளான் இருக்கு அதுக்கு கொஞ்சம் பணம் ரெடி பண்ணனும் ஊர்ல வீடு கட்டணும் என்று பட்டியல் வாசித்தேன்.
லவ் யூ :
அதற்கடுத்து அவள் பேசவேயில்லை. வேறு எந்த கேள்வியும் கேட்கவில்லை.
அவள் என்னை மனதார நேசித்திருக்கிறாள். இந்த வார்த்தைகளை என்னிடமிருந்து அவள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்பது தெளிவாக புரிந்தது.
இது சின்ன டிஸ்டர்பென்ஸ் தான். இதே லைஃப்ன்னு நினச்சு உன்னோட ஃபூயுச்சர ஸ்பாயில் பண்ணிக்காத ஒழுங்கா படி. நல்லா மார்க் எடு சரியா என்றேன்.
பதில் வரவில்லை.
ஏய் சொல்றது கேக்குதா இல்லையா? என்று மறுபடியும் கேட்டேன். பக்கவாட்டில் உட்கார்ந்திருந்த என்னுடைய கையை பிடித்துக் கொண்டாள். அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டு தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தாள்.
லவ் யூ..., நான் உன்ன ரொம்ப லவ் பண்றேன்.
இது கொஞ்ச நாளைக்குத் தான் :
எது நடக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது. அவள் மனதில் ஆசையை வளர்த்தது நானா? இதில் என் தவறு என்ன? அவளை எப்படி விலகச் செய்யலாம் என்ற யோசனை அப்போது எனக்கு ஓடவில்லை.
சரி சரி.... அழாத எல்லாரும் உன்னையதான் பாக்குறாங்க என்று சமாதனம் செய்தேன்.
இது ஒரு அட்ராக்ஷன் தான் சரியா, கொஞ்ச நாள்ல எல்லாம் காணமப் போய்டும். இதுக்காக உன் லைஃப் விட்றாத என்றேன்.
அவளுக்கு காதில் விழுந்ததா இல்லையா என்று தெரியவில்லை.
என் கையை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு என்னைய விட்டுப் போய்ராத என்று அழுதாள்.
அப்படி என்ன செய்தேன் :
அந்த கணம் உடைந்து விட்டேன். எனக்காக ஒருத்தி, என் கைகளை இறுக்கப்பற்றி உன்னை நேசிக்கிறேன் என்னை விட்டுப் போய்டாத என்று சொன்னால் அதைக் கேட்டும் உருகாதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன?
நான் மட்டும் விதிவிலக்கா? தோல் சாய்த்து அணைத்துக் கொண்டேன்.
இங்க பாரு கண்ணத்தொட... அழறத மொதோ நிப்பாட்டு. உன்னைய விட்டு எங்கயும் போமாட்டேன். அவ்ளோ புடிக்குமாடி என்னைய, அப்டி என்னடி உன்னைய பண்ணேன். ஆறு மாசம் பேசிருப்போமா? அதுக்குள்ள லவ்வா என்றேன்.
சிரித்தாள்.
பாப்பா.... :
இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் இந்த உறவுமுறையை விட்டு விலக வேண்டும் என்று நான் நினைத்து மனதில் ஏற்றி வைத்திருந்த காரணங்கள் எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டேன்.
அவள் எனக்கானவள் என்று மனதிலேயே சொல்லிக் கொள்ள ஆரம்பித்தேன். அவளை என் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினேன்.
எப்போதும் அவளை பாப்பா என்றே அழைப்பேன். பன்னிரெண்டாம் வகுப்பு வந்த பிறகு அவளை மிரட்டி மிரட்டி படிக்க வைத்தேன். படிச்சுட்டு வா, படிச்சு எழுதி பாத்தத போட்டோ எடுத்து அனுப்பு என்று கேட்டே அவளை படிக்க வைத்தேன். மேக்ஸ் கஷ்டம் என்றாள். பார்க்கில் சந்தித்து சொல்லிக் கொடுத்தேன்.
என் வீட்டில் :
என் வீட்டில் பெண் பார்க்கிறோம். திருமணம் செய்து கொள் என்று நச்சரிக்க ஆரம்பித்தனர். அவளிடம் கேட்ட போது, டிகிரி முடிச்சதும் கல்யாணம் அதுக்கு முன்னாடினா ரொம்ப கஷ்டம் என்று சொன்னதால் எதேதோ சாக்கு போக்கு சொல்லி தவிர்த்தேன்.
என் அம்மாவும் அப்பாவும் கோவில் கோவிலாக ஏறி இறங்கினார்கள். திருமணத்திற்கு எப்படியாவது சம்மதிக்க வேண்டுமென்று சொல்லி கலர் கலரான தாயத்து கட்டினார்கள்.
கல்யாணம் தான பண்ணனும் தம்பிக்கு பண்ணுங்கம்மா என்று சொல்லி வர்புறுத்தி சம்மதிக்க வைத்தேன். பாவம் என் காதலால் அவன் ஏன் சிரமப்பட வேண்டும்?
உறவுகள் எல்லாம் காரணத்தை கேட்டு துளைத்தெடுக்க எனக்கு முன்பாக தம்பிக்கு திருமணம் நடந்தது.
அவள் வீட்டில் :
இஞ்ஜினியரிங் சேர்ந்தாள் நான்கு வருடம். ஆரம்பத்தில் இருந்த அன்னியோன்னியம் கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனால் என்னை காதலிப்பதாக சொல்லிக்கொண்டே தான் இருந்தாள்.
அவளுக்காக இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என்று அவளுக்கு கொஞ்சம் பெருமை வேறு. அடுத்த வருஷம் படிப்பு முடியுது இப்போ வீட்ல வந்து பொண்ணு கேளு எப்டியும் ஒத்துக்க மாட்டாங்க காதுல விஷயத்த போட்றலாம்.
அப்பறம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி சம்மதிக்க வச்சிடலாம் எந்தப் பிரச்சனையும் இல்ல என்றாள்.
பெண் பார்க்கும் படலம் :
முதல் முறை பேசச் செல்லும் போதே அம்மா அப்பாவை எல்லாம் அழைத்துச் செல்லலாமா வேண்டாமா? என் வீட்டில் விஷயத்தை சொல்லலாமா என்று பயங்கரக் குழப்பம்.
சரி எப்டியும் தெரியப் போறது தானே என்று சொல்லி... அம்மா நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். அவ வீட்டுக்கு தான் இப்போ பேசப்போறேன் என்றேன். அடக் கழுத அதுக்கு தான் இவ்ளோ நாள கல்யாணம் வேணாம் வேணாம்னு சொன்னியாக்கும். யாரு அந்தப்பொண்ணு பேரென்ன என்று விசாரித்தாள்.
பெரியவங்க போய் பேசினா தான் நல்லாயிருக்கும். நீயே போய் பேசுவியா? நானும் அப்பாவும் போய் பேசுறோம் என்றாள்.
யாரு வீட்ல சொல்றா? :
ம்ம்மா... சும்மா இரு நாங்க லவ் பண்றது அவங்க அப்பாக்கு தெரியாது.
நீ மட்டும் என்ன சொல்லிட்டா பண்ண இத்தன வருஷம் ஒரு வார்த்த சொல்லிருப்பியாடா? சரி சொந்தக்காரங்கள கூப்ட்டு நல்ல நாள் பாத்து போகலாம். இப்போ சம்மதமான்னு மட்டும் கேட்டுட்டு வரலாம் என்றார்.
எனக்கும் அவர் சொல்வதே சரியென்று பட்டது. நான் தனியாக போய் கேட்பதை விட, இப்படி பெற்றோருடன் சென்று கேட்டாள் கொஞ்சம் மரியாதையாக இருக்கும் என்று எண்ணி நான் அம்மா அப்பா மூவரும் அவள் வீட்டிற்கு கிளம்பினோம்.
மகளைக் கொடுப்பீர்களா? :
அவளின் அம்மா கதவைத் திறந்தார். புரியாமல் வரவேற்றார்கள். உட்கார வைத்தார்கள்
அவள் உள்ளறையிலிருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பா தான் விஷயத்தை ஆரம்பித்தார்.
பையனும் பொண்ணும் காதலிக்கிறாங்க இன்னக்கி தான் சொன்னான். சரி, அதான் பொண்ணு கேட்டு போலாம்னு உங்க பொண்ணுக்கும் இந்த வருஷத்தோட காலேஜ் முடியுதுல்ல.
பதிலே வரவில்லை. மாமியார் கொடுமையிருக்கும்னு எல்லாம் பயப்படாதீங்க என் மக மாதிரி பாத்துப்பேன் என்றார்.
அங்கிள் ஆறு வருஷமா நாங்க லவ் பண்றோம். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டோம். இது ஏதோ அவசரத்துல வந்த காதல்னு நினைக்காதீங்க உங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று நானும் கேட்டேன்.
கேள்விகள் :
சில நிமிட மவுனத்திற்கு பிறகு, எங்க வேலப்பாக்குறீங்க? என்ன சம்பளம் என்று கேட்க ஆரம்பித்தார். வரிசையாக சொல்லிக் கொண்டே வந்தேன்.
வயசு என்ன?
31
என்ன 31 ஆ?
ஆமா அங்கிள். எம்.பி.ஏ முடிச்சு ரெண்டு வருஷம் கழிச்சு இந்த கம்பெனில ஜாயின் பண்ணேன். அங்க சேர்ந்து இப்போ மூணு வருஷம் கம்ப்ளீட் ஆகப்போகுது. நெக்ஸ்ட் அப்ராட் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் என்றேன்.
என் பொண்ணுக்கு 21 :
கோபமானார். என்ன குடும்பமா சேர்ந்து வந்து கலாட்டா பண்றீங்களா?
என் பொண்ணு இப்போ தான் காலேஜ் படிச்சிட்டு இருக்க வர்ற மார்கழி மாசம் வந்தா அவளுக்கு 21 வயசு. சின்னப்புள்ளைப் போய் உனக்கு கட்டிக்குடுன்னு வந்து நிக்கிறீங்க உண்மைய சொல்லுங்க இது மொதோ தாரமா? ரெண்டாவது தாரமா? மறச்சு பொய் சொல்லி பொண்ணு தேடுறீங்களா? என்று எதேதோ பேச ஆரம்பித்தார்.
உங்க பொண்ண லவ் பண்றேன்னு சொல்லி தான் இவ்ளோ நாள் நாங்க பாத்த வரன எல்லாம் தட்டி கழிச்சுட்டு வந்திருக்கான். அவன் கிட்ட போய் இப்டி பேசலாமா என்றார் அப்பா.
என்னங்க அவன் சொன்னான்னா உங்க ரெண்டு பேருக்கும் எங்கப் போச்சு புத்தி. என் பொண்ணு இனிமே லைஃப் ஸ்டார்ட் பண்ணப்போறா... என்ன பாதி கிழவனுக்கா கட்டிக் கொடுக்க சொல்றீங்க
கிழவன்! :
அப்பாவும் கத்த ஆரம்பித்தார்.
என்ன பேச்சு இது.... உங்க பொண்ணுக்காக இவ்ளோ காத்திருந்தவன பாத்து இந்தப் பேச்சா பேசுறது, உங்க பொண்ணும் தான லவ் பண்ணா
அவளை அழைத்தார். வந்து நின்றாள்.
ஏம்மா.... சொல்லும்மா நீயும் என் பையனும் காதலிக்கலையா என்று அப்பா கேட்க அவள் மவுனமாக நின்றாள் அவளின் அப்பா கேட்டதும். ஆமாம் என்று தலையசைத்தாள்.
சின்னப் புள்ள :
அவ தான் சின்னப் பொண்ணு தெரியாம எதையோ சொல்லிருப்பா உடனே அத வேத வாக்க நினச்சிட்டு என் பொண்ண ஏமாத்த பாக்குறீங்களா?
அவ தான் சின்னப் பொண்ணு சரி புத்தி கெட்டுப் போய் சொல்லிருக்கா? உனக்கு எங்கப்போச்சு அறிவு என்று அவளின் அப்பா என்னைப் பார்த்து கேட்க ஒரு கணம் கூசி நின்றேன்.
லவ் மட்டும் தானா இல்ல.... எல்லாம் என்று இழுத்தார்
ஐயோ அங்கிள் அதெல்லாம் ஒண்ணுமில்ல அந்த அளவுக்கு எல்லாம் கற்பனை செய்யாதீங்க நாங்க உண்மையா லவ் பண்ணோம் உங்க பெர்மிஷனோட கல்யாணம் பண்ணனும்னு தான் இவ்ளோ வருஷம் வெயிட் பண்ணி வந்து கேக்குறோம்.
ஓடியிருப்பியா? :
இல்லன்னா? இல்லன்னா என்ன பண்ணியிருப்ப என் பொண்ண கூப்ட்டு ஓடியிருப்பியா
உனக்கு எதோ வியாதி அத தெரிஞ்சுட்டு உன் சொந்தத்துல எவனும் உனக்கு பொண்ணு கொடுக்கல அதான் லவ்வு அது இதுன்னு என் புள்ளை ஏமாத்த பாக்குறீங்க.
பையன் லவ் பண்றான்ன்னு சொன்னதும் பெத்தவங்க இப்டித்தான் வெக்கமே இல்லாம போய் இன்னொருத்தன் வாசல்ல போய் நிப்பிங்களா? வாயிக்கு வந்தபடி பேச ஆரம்பித்தார்.
அவரின் ஒவ்வொரு வர்த்தையும் அவ்வளவு ரணமாக இருந்தது. சரிக்குச் சரி அப்பாவும் பேசினார்.
ஒரு கட்டத்தில் நானும் கோபமாகி இப்ப ஒரு வார்த்த சொல்லுடி எவன் தடுத்தாலும் உன்னைய தூக்கிட்டு போய் தாலி கட்றேன்.
மௌனமாக நின்றிருந்தாள் :
சொல்லு... இதுவரைக்கும் எல்லாமே நீ சொன்னபடி தான் நடந்திருக்கேன் ஆரம்பத்துல நான் வேணாம்னு விலகினப்போ என்னைய விட்டு போய்ராதன்னு அழுதல்ல இப்போ சொல்ல எனக்கு நீதான் வேணும்னு ஒரு வார்த்த சொல்லு என்று கத்தினேன்.
மௌனமாக நின்றிருந்தாள்.
என்ன என் பொண்ண மிரட்டுறீங்களா? வீட்டுக்குள்ள வந்து ரவுடித்தனம் பண்றீங்களா என்று அவர் எழுந்தார். அவ என் பொண்ணு நான் சொல்றத தான் கேப்பா மொதோ நீ வீட்ட விட்டு வெளியப் போ விட்டா ரொம்ப பேசுறா? அவ சொன்னா இவரு கூட்டிட்டு போயிருவாராம்.
வெளிய போடா நாயே... இது உன் அப்பன் தானா இல்ல சும்மா ட்ராமா போட எங்கையாவது புடிச்சுட்டு வந்தியா என்று பேச ஆத்திரத்தில் சட்டையை பிடித்தேன். அவரும் அடிக்கப் பாய்ந்தார்.
விபரீத முடிவு :
நிலைமை விபரீதமானது. கத்துக் கொண்டு அடிதடியாக வீடு முன்பாக ஆட்கள் கூடிவிட்டார்கள்.
கிழிந்த சட்டையுடனும் பெரும் அவமானத்துடனும் வீடு வந்து சேர்ந்தோம். வந்ததும் கதவை தாளிட்டு கதறியழுதேன். ஆரம்பத்துலேயே இதெல்லாம் வேணாம் சரி வராதுன்னு சொல்லி விலகியிருக்கணும். அவ மனசு கஷ்டப்படுமேன்னு பரிதாபம் பாத்து பாத்து இப்ப பாரு என்ன பேச்சு பேசுறான் அந்த நாயி, இவ ஒரு வார்த்த கூட பேசலையே அப்போ இவ்ளோ நாள் நம்மள ஏமாத்தினாளா?
தேவையில்லாம அம்மா அப்பாவையும் கூட்டிட்டுப் போய் அவங்களுக்கும் அவமானம். எதேதோ தோன்றியது. அவன் சொன்ன வார்த்தைகளே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டேயிருந்தன. இங்கேயேயிருந்தால் விபரீதமாக எதாவது செய்து விடுவேன் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறினேன். அப்பா ஒரு மூளையிலும் அம்மா ஒரு மூளையிலும் உட்கார்ந்திருந்தார்கள்.
பைத்தியங்கள் :
பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தேன்....
அம்மா வாசல் வரை ஓடி வந்தாள் எங்கப்போற.... சொல்லிட்டு போ டேய் டேய் என்று கத்தினாள் எதையும் கேட்கவில்லை. அப்படியே அரிவாளை எடுத்துக் கொண்டு அவளையும் அவளின் அப்பனையும் வெட்டிச் சாய்த்துவிட வேண்டும் போலத் தோன்றியது.
இவ பல்ல பல்ல காமிச்சு லவ் பண்ணுவாளாம். விட்டு போய்றாதான்னு அழுவாளாம். விலகுறவனையும் பிடிச்சு இழுத்து லவ் பண்றேன் நீ இல்லன்னா செத்துருவேன்னு சொல்வாளாம். இவளுக்காககாத்திருந்த நாம்ம பைத்தியக்காரனுங்க
மொட்டை மாடியில் :
டாஸ்மாக்கிற்குள் நுழைந்து ஃபுல்லாக குடித்தேன். இரவு வரை அங்கேயே கிடந்தேன். மணி பத்தானதும் அண்ணே கடைய மூடப்போறங்க என்றான் ஒரு சிறுவன். வீடு வந்து சேர்ந்தேன். எங்கே உள்ளே சென்றாள் அம்மாவும் அப்பாவும் மேலும் வருத்தப்படுவார்களோ என்று நினைத்து பக்காவாட்டில் இருக்கும் படி வழியாக ஏறி மொட்டை மாடியில் படுத்துக் கொண்டேன்.
பைக் சத்தும் கேட்டு இவ்வளவு நேரம் ஆன பிறகும் உள்ளே வராததை தொடர்ந்து அப்பா வெளியே வந்தார். மொட்டை மாடியில் நான் புலம்பும் சத்தம் கேட்டு மேலே வந்தார்.
வாழ்க்கைய தொலச்சுறாதடா :
குடிச்சிருக்கியாடா?
குடிச்சா என்ன குடிக்கலன்னா என்ன? உன் பையனுக்கு எதோ நோய் வந்திருச்சாம் அதான் எவனும் பொண்ணு தர்லையாம்... உன் பையன் ஏமாந்துட்டான்பா நான்பாட்டுக்கு புலம்பித் தள்ளினேன்.
அவர் என்னைப் பிடித்து உலுக்கினார் எதுவும் சட்டை செய்ய வில்லை.
இது என்ன புதுப்பழக்கம்?
என்னைய ஏமாத்திட்டாப்பா அவ.... என்னால உனக்கு அவமானம் தான, நான் செத்துப்போறேன்பா நான் வாழவே லாயிக்கில்ல நான் சாவுறேன்.
என் முன்னால் கீழே உட்கார்ந்த அப்பா பளார்.... என்று கன்னத்தில் ஓங்கி அறைந்தார். ஒரு கணம் தான். அந்த கணத்தில் எல்லா போதையும் இறங்கியது, தெளிவாய் அவரைப் பார்த்தேன்.
ஒற்றை வார்த்தையில் என்னை தேற்றினார்.
வாழ்க்கைய தொலச்சுறாதடா மவனே.... இதில்லடா வாழ்க்க. நீ பாக்க வேண்டியது செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment