மார்கழியில் பாடுவோம் திருப்பள்ளியெழுச்சி!
திருப்பள்ளியெழுச்சி -1
திருப்பெருந்துறை எனும் திருத்தலத்தில், மாணிக்கவாசகர் அருளிய இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும், நம்மைப் பக்திக்குள் வெகு அழகாகக் கடத்திச் செல்பவை.
போற்றி! என் வாழ்முதலாகிய பொருளே!
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையோய்! எனையுடையாய்!
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே!
போற்றி! என் வாழ்வுக்கு முதலாக அமைந்த பொருளே! பொழுது புலர்ந்தது. உம்முடைய பூப்போன்ற கழலடிக்கு அதுபோன்ற மலைகளைக் கொண்டு வழிபட்டு, உம்முடைய திருமுகத்தில் எங்களுக்கு அருள் செய்யும் பொருட்டு, மலர்கின்ற அழகிய புன்னகையைக் கண்டு, அதனால் (உறுதிபெற்று) உம் திருவடிகளைத் தொழுகின்றோம்.
தேன் தவழும் இதழ்களைக் கொண்ட தாமரைகள் மலர்கின்ற குளுமையான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! காளை பொறித்த உயர்ந்த கொடியை உடையவனே! என்னை உடையவனே! எம்பெருமானே! பள்ளி எழுந்து அருள்வாயாக! என்று போற்றி வணங்கிக் கொண்டாடுகிறார் மாணிக்கவாசகர்.
இந்தத் திருப்பள்ளியெழுச்சிப் பாடலை அனுதினமும் பாடுங்கள். இந்த குருவார நன்னாளில், குருவுக்கெல்லாம் குருவாகத் திகழும் ஈசனைத் தொழுது, மனதார வேண்டுங்கள். வாழ்க்கைக்கு வழிகாட்டுவார். வாழ்க்கையாக இருந்து அருள்பாலிப்பார் சிவனார்!
Comments
Post a Comment