கவலைகள் களையும் கந்தாஸ்ரமம்
சென்னை - சேலையூர்

புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகளின் சீடர் ஸ்வயம்பிரகாசர். அவரது சீடர் சாந்தானந்த சுவாமிகள். 1921ல் அவதரித்த அவரது இயற்பெயர் சுப்ரமணியம். அவரால் ஸ்தாபிக்கப்பட்ட தலங்கள் ஸ்கந்தாஸ்ரமம் என பெயர் பெற்றன. சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தைத் தொடர்ந்து 2002ம் வருடம் மே 27ம் தேதி இவர் மகா சமாதி அடைந்தார். அவரால் எழுப்பப்பட்ட ஸ்கந்தாஸ்ரமம் எனும் அற்புத ஆலயம் சென்னைசேலையூரில் உள்ளது. பிரமாண்ட முறையில் கண்களைக் கவரும் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்கும் இறையுருவங்களை இத்தலத்தில் தரிசிக்கலாம். ஆலயத்தில் நுழைந்ததும் பஞ்சமுக ஹேரம்ப கணபதியை தரிசிக்கலாம். ஐந்து யானை முகங்களோடு, அபயம், வரம், பாசம், தந்தம், ருத்ராட்சமாலை, அங்குசம், பரசு, உலக்கை, கொழுக்கட்டை, பழம் ஆகியவற்றைத் தன் பத்து கரங்களில் ஏந்தி அற்புத கோலத்தில் அருள்புரிகிறார். ப்ருசுண்டீ எனும் பக்தருக்கு அருள் வழங்க விநாயகர் எடுத்த திருக்கோலமாம் இது. போஜராஜன் இயற்றிய ராமாயண சம்பூ எனும் காவியத்தில் கடவுள் வாழ்த்தில் இந்த ஹேரம்ப கணபதியின் திருவுருவை அவர் பாடிப் போற்றியுள்ளார்.
ஒவ்வொரு சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்றும் இந்த கணபதிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இவரை வலம் வரும்போது கோஷ்டத்தில் பாலகணபதி, ஹேரம்பகணபதி, லட்சுமி கணபதி ஆகியோரின் சுதை உருவங்களையும் தரிசிக்கலாம். ஆலயத்தினுள் நுழைந்ததும் கருவறையில் 6 அடி உயரத்தில் அன்பே வடிவாய், அழகே உருவாய் பாசம், அங்குசம், வரதஅபய கரங்கள் தாங்கி புவனேஸ்வரி அருள்கிறாள். இத்தேவியை வலம் வரும்போது கோஷ்டங்களில் தசமகாவித்யா தேவியர்களையும் ஒருசேர தரிசிக்கலாம். செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, ஆடிவெள்ளி, தைவெள்ளி, சாரதா நவராத்திரி தினங்களில் இந்த புவனேஸ்வரி தேவிக்கு வித விதமான அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. தேவியை வழிபடுபவர்களுக்கு அவளின் கடைக்கண் பார்வையால் சகல சௌபாக்கியங்களும் கிட்டுகின்றன என அபிராமி பட்டர் கூறியதை மெய்ப்பிப்பவள் இந்த புவனேஸ்வரி தேவி. அன்னைக்கு வலப்புறம் தல கணபதியான கமலசித்தி விநாயகர் கோயில் கொண்டுள்ளார். இடப்புறம் சாந்தானந்தரின் சந்நதி உள்ளது. தன் குருநாதர்களோடு அவர் திருவருள் புரிகிறார்.
புவனேஸ்வரி தேவியின் சந்நதிமுன் பூரண மஹாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ‘ஸுமேருமத்ய ஸ்ருங்கஸ்தா ஸ்ரீமன்நகரநாயிகா’ என மஹாமேருவை லலிதா ஸஹஸ்ரநாமம் போற்றுகிறது. தேவியை மேருவில் ஆவாஹனம் செய்து பூஜித்தால் அம்பிகையின் அருளால் சகல தோஷங்கள், கிரக தோஷங்கள் நீங்கி பக்தன் அனைத்து நலன்களும் பெறுவான் என மூகபஞ்சசதியும் கூறுகிறது. பஞ்சமி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி, அமாவாசை, ஆடிவெள்ளி, தைவெள்ளி, சாரதா நவராத்திரி காலங்களில் இந்த மேருவிற்கு நவாவரண பூஜைகள் செய்யப்படுகிறது. ஆவரண தேவதைகளுடன் சேர்த்து அம்பிகையை பூஜிப்பது என்பது ‘மஹாயாக க்ரமாராத்யா’ என்ற ஒரு யாகத்தை நிறைவேற்றுவதற்கு ஒப்பாகும் என்றே சொல்லப்பட்டுள்ளது. பக்தர்கள் பெருமளவில் இந்த பூஜையில் கலந்து கொண்டு தேவியின் திருவருளைப் பெறுகின்றனர்.
தேவிக்கு வலப்புறம் உள்ள சந்நதியில் சரபேஸ்வரர் அருள்கிறார். நாராயணனே எல்லாம், அவனே எங்கும் உளன் என்பதை தன் மகன் கூறியதைக் கேட்ட ஹிரண்யன், அகந்தையால் இறையடி பணிய மறுத்தபோது நரசிம்மமூர்த்தி அவனைக் கொன்று ஆரவாரித்தார். அவரது ஆரவாரத்தால் உலகமே அழிந்துவிடுமோ என அனைவரும் அதிர்ந்தபோது ஈசன், சரபேஸ்வர அவதாரம் எடுத்தார். தன் இறக்கைகளாலும் கால்களாலும் நரசிம்மரை கட்டி அணைத்து அவர் சினம் தணித்து இந்த உலகைக்காத்தார் என காஞ்சிபுராணம் கூறுகிறது. பட்சிகளின் அரசனாக ‘ஸாலுவேசன்’ எனும் திருநாமமும் இவருக்கு உண்டு. பத்தடி உயரத்தில் பஞ்சலோகத்தினாலான சரபேஸ்வரர் தன் திருக்கரங்களில் மான், மழு, சர்ப்பம், தீ ஏந்தியுள்ளார். கொடிய பகைவரை அழித்து தீராத இன்னல் தீர்த்து சரணடைந்தோர்க்கு அபயமளிக்கும் தெய்வம் சரபமூர்த்தி என வேதங்கள் போற்றுகின்றன. பகைவர், நோய், வனத்தில் பயம், பாம்பு போன்ற விஷஜந்துக்களால் வரும் ஆபத்துகள், தீவிபத்து, யானை, கரடி போன்ற விலங்குகளின் தொல்லை, பஞ்சபூதங்களால் வரும் ஆபத்து போன்றவற்றிலிருந்து சரபேஸ்வரர் காப்பார் என அதர்வண வேத மந்திரம் குறிப்பிடுகிறது.
பிரதோஷ வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையிலும் இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இவரது பிராகார சுற்றுச் சுவர்களில் பைரவரின் பல்வேறு மூர்த்தங்கள் சுதைச் சிற்பங்களாக விளங்குகின்றன. தமிழகத்தில் அறுபடை வீடுகள் கொண்டு அருளாட்சி செய்துவரும் முருகனை ஸ்வாமிநாதனாக, 10 அடி உயரத்தில் எழில் கொஞ்சும் திருவடிவில் இத்தலத்தில் தரிசிக்கலாம். மிகவும் வரப்ரசாதி இவர். புவனேஸ்வரி தேவியின் நேர் எதிரே இவர் சந்நதி உள்ளது. தாயின் பார்வையில் எப்போதும் இருப்பதால் இந்த முருகப்பெருமான் கருணையில் வடிவாகவே அருட்காட்சியளிக்கிறார். ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என அருணகிரிநாதப் பெருமான் பாடியபடி இந்த முருகன் அடியார்களுக்கு குருவாய் இருந்து அவர் தமக்கு வருவாய் எனும் செல்வ வளத்தையும் அருள்கிறார். இவரது பிராகார சுற்றுச் சுவர்களில் அறுபடை வீட்டு முருகப்பெருமான்களும், கதிர்காம முருகனும், பாலமுருகனும் சுதை வடிவில் அருள்கின்றனர். ஞானமும், செல்வமும் வேண்டும் பக்தர்கள் இந்த மேற்கு பார்த்த சுவாமிநாதப் பெருமானை வணங்கி வளம் பெறுகின்றனர்.
சூரனை வதம் செய்ய, தாயை வணங்கி, சக்தி வேலைப் பெற்றதை நினைவுறுத்தும் வகையில் தாய் புவனேஸ்வரியின் திருவுருவின் எதிரில் பணிவுடன் கொலுவிருக்கிறார். தந்தைக்கே பாடம் சொன்ன, குருவின் குருவாக அருளும் இவரை குருபெயர்ச்சி நாளில் வணங்குதல் சிறப்பாகக் கூறப்படுகிறது. கந்த சஷ்டி விரதத்தையொட்டி, ஆறு நாட்களிலும் வித விதமான அலங்காரங்களில் ஜொலிப்பார் இவர். கிருத்திகை தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகின்றன. அதற்கு அடுத்த சந்நதியில் சரபேஸ்வரரின் நேர் எதிரே ப்ரத்யங்கிரா தேவி அருளாட்சி புரிகிறாள். சூலம், பாசம், டமருகம், கபாலம் ஆகியவற்றைத் தன் கைகளில் ஏந்தி அருள்கிறாள். சிங்கத்தின் மீது அமர்ந்த திருக்கோலம். சதி எனும் பார்வதியின் கோபமே ப்ரத்யங்கிராவாக உருவெடுத்ததாக மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்திரஜித் இந்த ராமலட்சுமணரை வெல்ல இந்த ப்ரத்யங்கிரா தேவியைக் குறித்தே நிகும்பலா யாகம் செய்தான். அந்த யாகம் நிறைவு பெற்றால் அவனை யாராலும் அழிக்க முடியாது என்பதற்காக லட்சுமணன் அவனை அழித்ததாக புராணங்கள் பகர்கின்றன.
தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருள்பவள். மது-கைடபர் வதத்தின்போது திருமாலுக்கே உதவிய பெருமை பெற்றவள். வறுமை, நோய், பகை போன்ற எல்லாவகை பயங்களையும் இந்த தேவி நீக்கியருள்கிறாள். நடுவில் மகாமேரு, நான்கு புறங்களிலும் புவனேஸ்வரி, ஸ்வாமிநாதன், சரபேஸ்வரர், ப்ரத்யங்கிரா சந்நதி என்ற இந்த அமைப்பு அபூர்வமானது; வேறெங்கும் காணக்கிடைக்காதது என்றும் சொல்லலாம். ராமாயணத்தில் வரும் மயில்ராவணனின் பஞ்ச பிராணன்களும் வண்டு வடிவாக இருந்தன. அவற்றை ஒரே நேரத்தில் கொன்றால்தான் மயில்ராவணன் மடிவான் என்பதற்காக எடுத்த அவதாரமே பஞ்சமுக ஹனுமான். சீதையை மரணத்தில் பிடியிலிருந்து காத்தவன், சூளாமணி கொணர்ந்து ராமனுக்கு நிம்மதியளித்தவன். பரதனின் இன்னுயிர் காத்தவன் போன்ற பல பெருமைகளைப் பெற்ற அனுமானை இத்தலத்தில் பஞ்சமுகங்களோடு தரிசிக்கலாம். வானர, நரசிம்ம, கருட, வராஹ, ஹயக்ரீவ முகங்களோடு தன்னை வழிபடும் பக்தர்களுக்கு புத்தி, சக்தி, திவ்யஞானம், சத்ரு ஜெயம், சகல காரிய சித்திகளைத் தருகிறார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ வழிபாடுகள் செய்யப்படுகின்றன. சனிகிரக பாதிப்புகளிலிருந்து இந்த அனுமன் காப்பாற்றுகிறார். ஹனுமத் ஜயந்தியன்று இந்த அனுமனை பக்தர்கள் பெருமளவில் வந்து தரிசித்து அருள் பெறுகின்றனர்.
வறுமை, நோய், பேரச்சம் போன்றவற்றிலிருந்து மக்களைக் காக்கும் சுதர்சனர் 28 அடி உயரத்தில் பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டு இத்தலத்தில் கிழக்கு நோக்கி அருள்கிறார். அவரின் பின்புறம் லட்சுமி நரசிம்மர் பிரகலாதனோடு காட்சி தருவது எங்குமே காண இயலாத அற்புதம். கருவிலிருந்த குழந்தை பரீட்சித்தைக் காத்தது, கஜேந்திரன் எனும் யானையைக் காத்தது போல, தன்னை வணங்கி வலம் வரும் பக்தர்களையும் இவர் காக்கிறார். இவரை புதன் சனிக்கிழமைகளில் வழிபட சத்ருக்களினால் ஏற்பட்ட தீமைகள் விலகுகிறது. இவருக்கு எதிரே 5 அடி உயரத்தில் சுதைச் சிற்பமாக திருமலையில் அருளும் வெங்கடாஜலபதியை தரிசிக்கலாம். ஹரிஹர புத்ரனாய்த் தோன்றி பாலவயதுடையவனாயினும் பக்தர்களை சம்சாரக் கடலிலிருந்து கரையேற்றும் படகாய்த் திகழ்பவனும், யோகியரின் மனத்தாமரையை இடமாகக் கொண்டு சொர்க்கம், மோட்சம் போன்றவற்றை அருளும் ஐயப்பன், இங்கே 5 அடி உயர பஞ்சலோக மூர்த்தியாய் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். வலது கரம் ஞானமுத்திரை காட்ட, இடக்கரம் தொடை மீது வரமுத்திரை காட்ட, மார்பில் யோக பட்டம் ஒளிர திருக்காட்சியளிக்கிறார் இவர்.
ஆலய பிராகாரத்தில் மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாதுர்க்கை மூவரும் ஓருருவாக அஷ்டதசபுஜமகாலக்ஷ்மியாய் அருள்கின்றனர். ராகு கிரகத்தால் வணங்கப்பட்டதால் ராகுகால துர்க்கை எனவும் மங்களசண்டி எனவும் இத்தேவி வழிபடப்படுகிறாள். ராகு தோஷம் போக்கும் அன்னை இவள். பெண்களின் திருமணம் தடைபடுவது, திருமண வாழ்வில் ஏற்படும் துன்பம், ராகு/செவ்வாய் தோஷங்கள் போன்றவை இந்த அன்னையை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் வழிபடுவதால் நீங்கி நல்வாழ்வு கிட்டுகிறது என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. அதை அடுத்து 10 அடி உயரத்தில் ஸஹஸ்ரலிங்கத்தையும் 6 அடி உயரத்தில் நந்தியம்பெருமாளும் திருவருள் புரிகின்றனர். ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் விசேஷ அபிஷேக அலங்காரங்களும், ஐப்பசி மாத பௌர்ணமி அன்று அன்னாபிஷேகமும், கார்த்திகை மாத சோமவாரங்களில் சங்காபிஷேகமும் இந்த ஸஹஸ்ர லிங்க மூர்த்திக்குச் செய்யப்படுகிறது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய பாணத்தை விட உயரமான பாணத்தையுடையவர் இவர். இந்த லிங்கமூர்த்தியில் வரிசைக்கு 53 எனும் கணக்கில் 19 வரிசைகளில் 1007 சிறு லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மூல மூர்த்தியுடன் சேர்த்து 1008 லிங்கங்கள். இவரின் எடை 20 டன்.
அடுத்து காகத்தின் மேல் தன் வலக்காலை வைத்து எழிலார்ந்த கோலத்தில் பத்தடி உயர சனிபகவானை தரிசிக்கலாம். இவருக்கு தமிழ் மாதங்களின் முதல் சனிக்கிழமையில் விசேஷ வழிபாடுகள் நடக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையிலும் எள்ளன்னம் பிரசாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அவரை அடுத்து மனிதர்களின் அறியாமையிருள் நீக்கி, ஞான ஒளிபெற தத்தகீதையை அருளிய தத்தாத்ரேயரை 12 அடி உயர மூர்த்தியாக தரிசிக்கலாம். கார்த்தவீர்யார்ஜுனன் எனும் ஆயிரம் கைகள் கொண்ட மன்னன், தத்தாத்ரேயரை உபாசித்து அவரருளால் பல வரங்களைப் பெற்றவன். சாந்தனந்த சுவாமிகளும் தத்த பரம்பரையில் வந்த பெருமை பெற்றவர். ஞானம் வேண்டுவோர் வணங்க வேண்டிய இறை ஆசான், இந்த தத்தாத்ரேயர். தினமும் பிரத்யங்கிரா சரப சூலினி ஹோமம் முடிந்தவுடன் ஆலயத்தில் அன்னதானம் செய்யப்படுகிறது. அன்னதானகூடத்தில் அழகுருவாய் அன்னபூரணி தேவியை தரிசிக்கலாம். ஆலயத்தில் கோசாலையும் உள்ளது. ஆலயம் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. ஆலய கோபுரங்கள் ஒடிஸா மாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அமைதியாக தியானம் செய்ய தியான மண்டபமும் இத்தலத்தில் உள்ளது. ஆலயத் தொடர்புக்கு: (044)22290134, 22293388, 22291647.
Comments
Post a Comment