மவுசு கூடும் குறைந்த விலை வீடுகள்


ட்டுமானத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக நீடித்துவரும் தேக்க நிலை, பொருளாதார மந்தநிலை, கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம், வீடுகளைக் கட்டி முடிப்பதில் கால தாமதம், பணமதிப்பு நீக்கம் போன்றவை அந்தத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. இதன் காரணமாக, கட்டப்பட்ட சொகுசு வீடுகளை விற்க முடியாமல் கட்டுமான நிறுவனங்கள் திணறி வருகின்றன. இதனால், பல நகரங்களிலும் இன்று சொகுசு வீடுகள் அல்லது வில்லா எனப்படும் தனி வீடுகளைக் கட்டக் கட்டுமான நிறுவனங்கள் தயங்குகின்றன. மாறாக, குறைந்த விலை வீடுகளைக் கட்ட கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
இன்று முக்கிய நகரங்களின் மையப் பகுதிகளில் நிலத்தின் விலை முன்பைவிட எகிறிவிட்டது. அதனால், நகர்ப்புறங்களின் மையப் பகுதியில் இடம் கிடைத்தாலும் கட்டுமான நிறுவனங்கள் வீடு கட்ட விரும்புவதில்லை. எல்லா நிறுவனங்களும் புறநகர்ப் பகுதிகளைத் தேடித்தான் போகின்றன. சென்னையில் மட்டுமல்ல டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் போன்ற பெருநகரங்களிலும் இதே நிலைதான். அதனால், நகரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில்கூடக் குறைந்த விலை வீடுகளைக் கட்டுமான நிறுவனங்கள் கட்டுகின்றன. அப்படிக் கட்டப்படும் வீடுகளும் சொகுசு வீடுகள் அல்ல. குறைந்தவிலை வீடுகள்தாம் கட்டப்படுகின்றன. குறைந்த விலை வீடுகள் விற்பனையாகிவிடுவது இதற்குக் காரணம்.

வீடு வாங்குவோர் யார்?

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருந்தாலும், எல்லோராலும் வீடுகளை வாங்கிவிட முடிவதில்லை. குறைந்தபட்சம் ஆண்டுக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுவோரால் மட்டுமே வீடு வாங்குவதை நினைத்துப் பார்க்க முடிகிறது. இந்த வருவாய்ப் பிரிவினரும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு வீடு வாங்குவோர் அல்ல. வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கியே வீடு கட்டுகிறார்கள் அல்லது வாங்குகிறார்கள். எனவே, இந்தப் பிரிவினர் ரூ.20 லட்சம் முதல் ரூ.35 லட்சம்வரையிலான விலையில் வீடுகள் கிடைத்தால் மட்டுமே வீட்டை வாங்க முன்வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டுதான் சொகுசு வீடுகளுக்குப் பதிலாகக் குறைந்த விலையுள்ள வீடுகளைக் கட்டுவதில் கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
ஏனெனில், வங்கிகளில் 80 முதல் 85 சதவீதம்வரை கடனுதவி கிடைத்துவிடுவதால், வீடு வாங்க விரும்பும் இந்த வருவாய்ப் பிரிவினரால் குறைந்த விலையில் புதிய வீடுகளை வாங்க முடிகிறது. இந்த வீடுகள் 550 முதல் 700 சதுர அடி பரப்பிருந்தால் போதும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். அதை மனதில் வைத்தே குறைந்த பரப்பளவிலான வீடுகளைக் குறைந்த விலையில் கட்ட கட்டுமானத் துறையினர் விரும்புகிறார்கள்.
பெருநகரங்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களில்கூட மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பலவும் வாங்குவதற்கு ஆள் இல்லாமல் காலியாகவே கிடக்கின்றன. அப்படியானால், சொகுசு வீடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனால், இரண்டு படுக்கை அறை, ஒரு படுக்கை அறை கொண்ட வீடுகள் ஓரளவுக்கு விற்பனையாகி விடுகின்றன. இந்தப் போக்கின் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாகவே கட்டுமானத் துறையினர் அதிக விலையுள்ள சொகுசு வீடுகளைக் கட்டுவதை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துவிட்டனர். மாறாக, குறைந்த விலையுள்ள வீடுகளைக் கட்டுவதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
இந்த நிலை இனி வரும் காலத்திலும் தொடரவே செய்யும் என எதிர்பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? அது ஏன் தெரியுமா?

பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

ஆண்களே!! 30வயாசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களா?