குறிப்புகள் பலவிதம்: வறண்ட சருமத்துக்கு ஆரஞ்சு
வெயில் காலத்தைவிடப் பனிக் காலத்தின்போது காலையில் சீக்கிரமாக எழுந்து உடற்பயிற்சி செய்தால் முகம் பொலிவாக இருக்கும்.
குளிர்காலத்தில் சோப்பு பயன்படுத்துவதால் உடலில் வறட்சி ஏற்படும். இதற்குப் பதில் கடலை மாவு, பயத்த மாவு, ஆரஞ்சுப் பழத் தோல் (காயவைத்துப் பொடித்தது) ஆகியவற்றைச் சம அளவு சேர்த்துக் குளித்துவர சருமம் வறண்டுபோகாது.
குளிர்காலத்தில் தலை முடியின் வேர்கள் அடைபடுவதால் அதிக அளவு பொடுகு உண்டாகும்; கூந்தலும் வறண்டுபோகும். இதைத் தவிர்க்க வாரம் இருமுறை தலைக்குக் குளிக்க வேண்டும்.
குளித்துவிட்டு வந்தவுடன் மாய்ஸ்சரைஸசர் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்துவந்தால் சருமத்தின் வறண்ட தன்மை மாறும்.
பனிக்காலத்தில் வரும் உதடு வெடிப்பைத் தடுக்க பாலாடை, வெண்ணெய் அல்லது லிப் பாம் போன்றவற்றை இருவேளை தடவிவரலாம்.
வெயில் காலத்தில் அதிக அளவு பழங்களைச் சாப்பிடுவது போல் குளிர்காலத்திலும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களைச் சாப்பிட வேண்டும். அப்போதுதான் உடல் வறட்சி ஏற்படாது.
குளிர்காலத்தில் அதிக சூடான தண்ணீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் இயற்கையாக உள்ள எண்ணெய்ப் பசை நீங்கிவிடும். இளஞ்சூடான நீரில் குளிப்பதே எப்போதும் நல்லது.
எண்ணெய்ப்பசை சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரில் சிறு துண்டு பஞ்சை நனைத்துத் தடவிவர உடல் பளபளப்பாக இருக்கும்.
Comments
Post a Comment