நான் உனக்கானவள் அல்ல :
இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்றாள். ஒரு கணம் திக்கென்றது. இவ்வள நாட்கள் என்னுடன் ஆசையாய் பழகி விட்டு இப்படி ஏமாற்றுகிறாள், காதலிப்பதாய் தானே இத்தனை நாட்கள் நினைத்திருந்தோம் ஆனால் இப்போது விருப்பமில்லை என்கிறாளே என்று கோபம் கோபமாய் வந்தது.
காரணத்தை கேட்டேன். முதலில் மறுத்தவள் நான் வற்புறுத்திக் கேட்டதும் நான் உனக்கானவள் அல்ல என்று சொன்னாள்.
விருப்பங்கள் :
அதுவரையில் நான் விரும்பியது அது எனக்கு கிடைத்தே தீரும் என்று நம்பிக் கொண்டிருந்தவனுக்கு என் விருப்பத்திற்கு மாறாக ஒன்று நடக்கிறதா என்று கோபமடைந்தேன்.
எனக்கு எதிர்காலம் குறித்த ஓர் கற்பனை இருப்பது போலவே அவளுக்கும் ஒரு கற்பனை இருக்கிறது, அந்த கற்பனையில் தனக்கான வாழ்க்கைத் துணையாக அவள் நிர்ணயம் செய்திருப்பாள் அந்த தகுதிகள் எனக்கில்லை என்பது புரிந்தது.
ஆனாலும் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் விருப்பத்தை சொன்னவுடனேயே இதில் எனக்கு விருப்பமில்லை என்று சொல்லியிருக்கலாமே என்னை ஏன் இவ்வளவு காலங்கள் காக்க வைத்தாள் அவள் என்னை வேண்டுமென்று அவமானப்படுத்திவிட்டாள் என்று என்னென்னவோ தோன்றியது.
அவளின் பங்கு :
சத்தியமாய் இது ஒரு காதலென்றும் இந்த காதல் தோல்வியில் முடிந்ததென்றும் சொல்ல முடியாது , சொல்லவும் கூடாது தான். ஆனால் நான் எல்லாரிடமும் அப்படித் தான் சொன்னேன்.
ஒருத்தியை உயிருக்கு உயிராக நேசித்தேன். ஆனால் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் அந்த வலியிலிருந்து இன்னும் என்னால் மீண்டு வர முடியவில்லை என்று பார்ப்பவர்கள் எல்லாரிடத்திலும் சொன்னேன். தாடியை வளர்த்துக் கொண்டு திரிவது, பெண்களுக்கு எதிரான காதல் வசனங்கள் பேசுவது எல்லாவற்றையும் தவறாது செய்தேன். அப்படியே நம்பவும் செய்தார்கள்.
திருமணம் செய்ய... :
தனிமையில் உட்கார்ந்து யோசிக்கும் போது தான், எங்கள் இருவருக்குமிடையில் எவ்வளவு கால பழக்கம் இருக்கும் , நான் எப்போது காதலைச் சொன்னேன் அவள் எப்போது பதில் தந்தாள் காதலைச் சொல்வதற்கு முன்னாலும் அதற்கு பின்னாலும் அவளிடம் ஏதாவது மாற்றங்கள் தெரிந்ததா என்று யோசிப்பேன்.
சில நேரங்கள் அவள் மீது எந்த தவறும் இல்லை, எனக்கு ஒரு விருப்பம் இருந்தது அதே போல அவளுக்கும் ஓர் விருப்பம் இருந்திருக்கிறது என்று புத்திக்கு புரிந்தாலும் மனதுக்கு புரிவதில்லை. இந்நேரத்தில் எனக்கு வீட்டில் திருமணப்பேச்சை எடுத்தார்கள். எங்கோ ஜாதகம் போய் காட்டிவிட்டு இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்று பதறினார்கள்.
அத்தப் பொண்ணு தானா நமக்கு :
எங்கெங்கோ தேடி கடைசியில் அத்தை மகளை திருமணம் செய்யச் சொல்லி கை காட்டினார்கள். நாகரிகம் என்றால் என்ன என்று கேட்கும் பட்டிக்காட்டிலிருந்து ஒருத்தியை எனக்காகவென்று அழைத்து வந்திருப்பதாக தோன்றியது.
அப்போது தான் கல்லூரி முடித்திருந்தாள். அதுவும் ஊரில் இருக்கும் பெயரே வாயில் நுழையாத ஓர் கல்லூரி, அங்கே படித்தவளுக்கு சென்னையில் என்ன வேலை கிடைத்துவிடப்போகிறது. தும்மினாள் கூட ரெண்டு நிமிஷம் உக்கார்ந்துட்டு போங்க மாமா என்று சொல்பவளிடத்தில் என்ன நாகரிகத்தை எதிர்ப்பார்க்க முடியும். எனக்கு சற்றும் பொருத்தமில்லாத எனக்கு துளியளவும் பிடிக்காத அத்தை மகளா இனி என் வாழ்க்கை.
விருப்பங்களுக்கு முக்கியத்துவம் :
என் விருப்பங்களின் பட்டியலில் அதற்கான தகுதிகளுடன் நீயில்லை அதனால் நீ வேண்டாம் என்று ஒருத்தி என்னை தூக்கியெறிந்தாலே அதே போல நீ எனக்கு வேண்டாம் என்று அத்தை மகளை ஒதுக்கினேன். இந்த திருமணத்தில் எனக்கு துளியளவும் விருப்பமில்லை என்று உறவுகள் எல்லாரிடத்திலும் சொன்னேன்.
ஆனால் அங்கே என் விருப்பம் எதுவும் எடுபடவில்லை. பொலப்ப பாருடா.... எல்லாரும் பிடிச்சவள தான் கட்டிக்குவேன்னு அடம் பிடிச்சா யாருக்காவது இங்க கல்யாணம் நடக்குமா பேசமா சொல்றவள தாலிய கட்டு.... தானா வாழ்க்க ஓடிரும்.
அத்தை மகளே... :
திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அத்தை மகளுடன் மனம் ஒன்றி வாழ்க்கையை வாழ முடியவில்லை. சென்னைக்கு கூட அழைத்துச் செல்ல மனமில்லாமல் இங்கேயே விட்டுவிட்டுச் சென்றேன்.
மாதம் ஒரு முறை என்று வந்து பார்த்து விட்டு செல்வேன். ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவளிடம் நான் பேசியதுமில்லை. உனக்கு என்ன பிடிக்கும் என்றும் நான் கேட்டதில்லை எப்படியாவது அவள் இருக்கும் இடத்தை விட்டு விலகி ஓடிட வேண்டும் என்றே நினைப்பேன்.
எத்தனை நாள் இப்படி ஓட முடியும் :
மாதம் ஒரு முறை வீட்டிற்கு செல்வேன். காலையில் சென்று வீட்டில் இறங்கிவிட்டு, நண்பர்களை பார்க்கச் செல்கிறேன் என்று வெளியே வந்து விடுவேன் மதிய உணவிற்கு வீட்டிற்கு செல்வேன். பின் மாலையில் மீண்டும் எங்காவது வெளியே வந்து விடுவேன். ஊருக்குச் செல்லும் போது கூட மனைவியிடம் உட்கார்ந்து பேசியதாக நினைவில் இல்லை .
போகும் போதும் வரும் போதும் ஒரு சில வார்த்தைகளை போகிற போக்கில் சொல்வதுடன் சரி.
விபத்து :
ஒரு வருடம் இப்படியே ஓடியிருந்தது. ஒரு நாள் அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் கண் கூசும் அதீத வெளிச்சத்துடன் ஓர் வண்டி வருவது தெரிந்தது அதன் பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை.
கண் விழித்தேன். கண் முன்னால் நான் பரிபூரணமாக வெறுத்து ஒதுக்கிய மனைவி நின்றிருந்தாள். கண்ணை கசக்கிக் கொண்டு, சுற்றி முற்றி பார்த்தேன். அது மருத்துவமனை அம்மாவும் அப்பாவும் இருந்தார்கள்.
கதை கதையாய் :
சரிங்கத்த நான் வீட்டுக்கு போய் மதியத்துக்கு சமச்சு எடுத்துட்டு வரேன். நீங்க இருக்கீங்களா என்று கேட்டு விட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
அலுவலகத்திலிருந்து திரும்பும் போது சாலை விபத்து ஏற்பட்டதாகவும், ஒரு மணி நேரம் ரோட்டிலேயே கிடந்ததாகவும், அதன் பின்னர் உன் பாக்கெட்டில் இருந்த போன் ஒலித்திருக்கிறது அந்த சத்தத்தை கேட்டுதான் இங்க நீ இருக்குறதே பாத்தாங்களாம் இருட்டுல ஒண்ணுமே தெரியலையாம். அப்பறம் உன்னைய தூக்கி இந்த ஆஸ்பத்திரில போட்ருக்காங்க கடைசியா உன் பொண்டாட்டி தான் போன் பண்ணியிருக்கா.... அந்த நம்பரப் பாத்து தகவல சொல்லியிருக்காங்க.
இத்தனை நாளும் :
அப்பவே அவ ஒருத்தி கிளம்பி சென்னைக்கு வந்து இந்த ஆஸ்பத்திரிய தேடிப்பிடிச்சு வந்துட்டா. காலைல தான் எங்களுக்கே தகவல் சொன்னா நாங்க அன்னக்கி ராத்திரி வந்தோம். அதுக்குள்ள நீ வேலப் பாக்குற இடத்துல தகவல் சொல்றது டாக்டருங்க கிட்ட பேசுறது. செக்கப் பண்ண வந்த டாக்டருங்க சொல்றத விவரமா கேட்டு வச்சுகிறது, காயத்துக்கு மருந்து போட்றது. தினமும் உடம்ப தொடைக்கிறதுன்னு ஒரு நிமிஷம் கூட கண்ண மூடாம பாத்துகிட்டா.
எங்கயிருந்து பணத்த புரட்டினான்னு தெர்ல.... இதுவரைக்கும் இரண்டு லட்சம் கட்டியிருக்கிறதா சொன்னா என்றார்கள்.
சொல்ல சொல்ல எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இத்தனை வேலையை நாகரிகம் தெரியாத ஒருத்தியால் செய்ய முடியுமா? சென்னையில் அவளுக்கு என்னைத் தவிர யாரையும் தெரியாதே.... இரவோடு இரவாக கிளம்பி மருத்துவமனைக்கு எப்படி வர முடியும் ஒன்றும் புரியவில்லை.
எப்போ ஆக்ஸிடண்ட் ஆச்சு?
பத்து நாள் ஆகுது
வீட்டிற்கு :
அடுத்த பத்து நாளில் நான் ஓரளவுக்கு நடக்க ஆரம்பித்திருந்தேன். கை கால்கள் முழுவதும் சிராய்ப்பு, சட்டையை கூட சரியாக மாட்ட முடியவில்லை. வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் தான் நடக்க முடிந்தது. மெல்ல ஒவ்வொரு அடியாய் எட்டு வைத்து நடக்க எங்கே தடுமாறி விடுவேனோ என்று பயத்துடன் பின்னாலேயே வந்தால் ஒவ்வொரு முறை தடுமாறும் போதும் பாத்துங்க.... மெல்லமா போங்க சுவத்த பிடிச்சுக்கோங்க என்று பேசிக் கொண்டே வந்தாள்.
வீட்டில் எனக்காக தனியாக உணவு சமைத்து ஊட்டி விடுவது, உடை மாற்றிவிடுவது, கழிப்பறைக்குச் செல்ல உதவி செய்வது, என்னுடைய ஒவ்வொரு அசைவிற்கும் உடனிருந்தாள். பக்கபலமாய் இருந்தாள்.
குற்றவுணர்ச்சி :
அவள் எனக்காக ஒவ்வொரு வேலையை செய்யும் போதும் குற்றவுணர்ச்சியில் கண்ணீரே வந்து விடும். நீ வேண்டாம்,நீ எனக்கு தகுதியானவள் இல்லை என்று வெறுத்து ஒதுக்கினேனே ஆனால் எனக்காக இவ்வளவு வேலைகளை செய்கிறாளே... என்று வருத்தமாக இருக்கும்.
எனக்கு ஓர் விருப்பம் இருந்தது போலவே அவளுக்கும் ஓர் விருப்பம் இருந்திருக்கும் தானே என்று அவளிடம் கேட்க நினைத்தேன். உண்மையில் அவளுக்கு என்னை பிடித்திருக்கிறதா? பிடித்து தான் எல்லாம் செய்கிறாளா என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது.
நன்றி :
ஒரு நாள் எனக்கு உணவு ஊட்டுவதற்காக கஞ்சி தயாரித்து டம்ப்ளரில் ஊற்றிக் கொடுத்தாள். இங்க வா உக்காரு என்று அருகில் உட்காரச் சொன்னேன். திருமணமாக ஒன்றரை வருடங்களில் இப்படி ஒரு நாளும் நான் சொன்னதில்லை அமைதியாக உட்கார்ந்தாள்.
எங்கம்மா பக்கத்துல இருந்தா கூட இவ்ளோ நல்லா பாத்துப்பாங்களான்னு தெரியல அந்த அளவுக்கு பாத்துகிட்ட.... கண்ணைசைவுக்கு பக்கத்துல வந்து நிக்கிற, நேரம் தவறாம மருந்து மாத்திரைய கொடுக்குற, காயத்துக்கு மருந்து போடுற, எனக்குன்னு காரம் குறைவா சூடா சமச்சுத் தர்ற ஒரு மணி நேரத்துக்கு ஒருக்கா ஜூஸ் கொடுக்குற... அவள் செய்யும் அத்தனை வேலைகளையும் பட்டியலிட்டேன்.
அட நீங்க வேற.... :
இதுக்கெல்லாம் எப்டி நன்றி சொல்லப்போறேன்னு தெரியல உன்னைய காயப்படுத்தியிருந்தா என்னைய மன்னிச்சுடு என்றேன்.
பதிலேதும் வரவில்லை.
உன்னிடம் பேசாததற்கு இது தான் காரணம் என்று சொல்லி என் முதல் காதல் கதையை.... ஆம், அது தான் காதலென்று நம்பிக் கொண்டிருக்கும் கதையை விவரித்தேன், என் மனைவியானவள் இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று ஆசை ஆனால் திடீரென்று உன்னை கை காட்டி திருமணம் செய்து கொள்ளச் சொன்னார்கள் எனக்கு துளியளவும் விருப்பமில்லை. விருப்பமில்லாமல் தான் திருமணம் செய்து கொண்டேன்.
ஆனால் இந்த ஒரு மாதத்தில் உன் மீதான என் அபிப்ராயம் முற்றிலுமாக மாறிவிட்டது என்றேன்.
மனிதிலிருந்து மன்னிப்பு கேட்ட திருப்தி எனக்கும், கணவர் தன்னை புரிந்து கொண்டு விட்டார் என்ற சந்தோஷம் அவளுக்கும் பிறந்தது.... இந்த மகிழ்ச்சி வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்கும்.
Comments
Post a Comment